×

விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலை வளைவுகளில் பேரி-கார்டு: போலீசாரின் செயலுக்கு மக்கள் பாராட்டு

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக சாலை விபத்துக்களும், அதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் அதிவேகம் காரணமாக பல விபத்துக்கள் நடந்து  வருகின்றன. மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை என்எச்47 அதிக வளைவுகளையும், மேடு பள்ளங்களையும் கொண்டு விளங்குகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் என்எச்47 பல ஆபத்தான வளைவுகளை கொண்டுள்ளது. இப்பகுதிகளில் மிகவும் கவனமாக வேகத்தை குறைத்து செல்லாவிட்டால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலை விதிகளை பலரும் மதிக்காததும், அதிவேகமாக வாகனங்களில் செல்வதும் பெருமளவில் விபத்துக்கு காரணமாகின்றன.  குறிப்பாக பல இளைஞர்கள் அதிக திறன்கொண்ட பைக்குகளில் கண், மண் தெரியாமல் பறக்கின்றனர். இவர்கள் தங்களை குறித்தோ, குடும்பம் மற்றும் சாலையில் செல்லும் பிற பயணிகள் குறித்தோ எந்தவித எண்ணமும் இன்றி ‘ரப் டிரைவிங்’ செய்து விலைமதிப்பில்லாத இன்னுயிர் பிரிய காரணமாகின்றனர்.

இதுபோல பழுதடைந்த குண்டு, குழி சாலைகள், ஆக்ரமிப்பால் சுருங்கிய ேராடுகளும் விபத்துக்களை வரவழைத்து விடுகின்றன. நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்துக்கு சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக விபத்து பகுதிகள், ஆபத்தான வளைவுகள், குறுகலான இடங்களில் வேகத்தை குறைக்கும் வகையில் தடுப்புகள் மற்றும் சென்டர் மீடியன்கள் வைப்பதோடு, வாகனங்கள் செல்ல வேண்டிய அதிகபட்ச வேக எல்லை உட்பட அறிவிப்பு பலகைகளையும் வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்து எதுவும் நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்வதில்லை. ஆபத்தான வளைவு பகுதிகளில்கூட அறிவிப்பு பலகைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வாகனங்களில் வேகத்தை குறைத்து  பாதுகாப்பாக செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய, எஸ்பி நாத் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து  அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் போலீசார் பேரி-கார்டுகள் அமைத்தனர்.

இதனால் இப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து சாலைகளில் கவனமாக செல்வர். அதுபோல  ஆபத்தான வளைவு பகுதிகளில், தகர பேரல்களில் மண் நிரப்பி சென்டர் மீடியன் போல அமைக்கப்பட்டுள்ளன. இவை  அந்தந்த பகுதி காவல்நிலைய போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய இதுபோன்ற ெசயல்களை, அவர்கள் கண்களை மூடி குறட்டை விடும் நிலையில், பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி போலீசார் வைத்துள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் இதன் மூலம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் விபத்துக்களும் பெருமளவில் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : accidents ,police action , Accident, road curve, pear-card, people praise
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...